Thursday, January 12, 2012

மீள்குடியேற்றப்பட்ட மருதங்கேணி மக்களின் இன்றைய நிலை

0 comments
இலங்கையின் வடபுலத்தில் உள்ள யாழ் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள அழகிய கிராமமே இந்த மருதங்கேணி ஆகும். ஒரு கேணியை(கிணறு) சுற்றி பல மருத மரங்கள் வளர்ந்திருந்தபடியால் இந்த கிராமத்திற்கு மருதங்கேணி என்ற காரணப்பெயர் வந்ததாக சொல்லப்படுகின்றது. சுமார் நான்கு சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டுள்ள இக்கிராமத்தின் வடக்கு புறத்தே இந்து சமுத்திரமும் தெற்கு புறத்தே கடல் நீரேரியும் இதன் எல்லையினை வகுக்கின்றது.

மருதங்கேணியின் கிழக்கு புறத்தே வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் போன்ற கிராமங்களும் தெற்கு புறத்தே கடல் நீரேரிக்கு அப்பால் கல்லடி, மாசார், புதுக்காடு, பளை போன்ற கிராமங்களும் மேற்கு புறத்தே தாளையடி, செம்பியன்பற்று, நாகர்கோவில், குடத்தனை, வல்லிபுரம், தும்பளை, பருத்தித்துறை ஆகிய கிராமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராமத்திற்கு தெற்கு புறத்தே சமாந்தரமாக சரியாக ஏழு கிலோ மீற்றர் தொலைவில் ஏ9 நெடுஞ்சாலை செல்கின்றது. அத்துடன் பருத்தித்துறை நகரில் இருந்து 29 கிலோ மீற்றர் தொலைவிலும் அமைந்துள்;ளது. இங்குள்ள கடல் நீரேரிக்கு அப்பால் உள்ள கிராமங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஆகும்.



        இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைப்பற்றி கூறப்போனால் பெரும்பாலான மக்களின் பாரம்பரிய வாழ்க்கைத் தொழிலாக மீன் பிடித்தலும், விவசாயமும் ஆக காணப்படுகிறது. கடற்கரையை அண்டியிருக்கும் மக்கள் மீன் பிடித்தலை பிரதானமாக கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தூண்டில், வீச்சுவலை, கட்டுமரம், கரைவலை, படகு, வள்ளம் போன்றவற்றை கொண்டு பெருமளவு மீன்களை பிடிக்கிறார்கள். இவர்கள் கொண்டுவரும் மீன்களை நம்பி மருதங்கேணி மக்கள் மட்டுமல்ல மாசார்,பளை,முகமாலை,கொடிகாமம் மற்றும் வெளி மாவட்டங்களான கிளிநொச்சி, கொழும்பு மற்றும் இலங்கையின் தென்பகுதி போன்ற இடங்களில் வாழும் மக்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். இங்கு சிறிய மீன்கள் தவிர பாரை,திருக்கை,அறக்குளா,சுறா,சூரை போன்ற பெரிய மீன்களும் நண்டு,இறால்,கணவாய் போன்றவையும் பிடிக்கப்படுகின்றன. இங்கிருந்து கொண்டுவரப்படும் மீன்கள் மிகவும் ருசியானவை என்று பரவலாக பேசப்படுவதுடன் நாடு முழுவதும் பெரும் கிராக்கியும் நிலவுகின்றது. அதே போன்று இங்கிருந்து கொண்டுவரப்படும் கருவாடும் இலங்கை முழுவதும் பெருமளவில் விற்கப்படுகின்றன. வடகிழக்கு பருவ மழை பெய்யும் நவம்பர் பிற்பகுதி, டிசம்பர், மற்றும் ஜனவரி முற்பகுதி ஆகிய பருவ காலம் தவிர்ந்த ஏனைய மாதங்கள் முழுவதும் இங்கு கடற்றொழில் செய்யப்படுகின்றது. அதே போன்று விவசாயத்தை எடுத்து நோக்கினால் வடகிழக்கு பருவ மழையை நம்பி பெருமளவில் நெல் வயல் விதைக்கப்படுகின்றன. இதுவே விவசாயம் செய்யும் மக்களின் பிரதான வருமானமாக மார்க்கமாக அமைகின்றது. இதை தவிர வருடம் முழுவதும் வெங்காயம்,மிளகாய்,கத்தரி,வெண்டி போன்ற அனைத்து விதமான மரக்கறி பயிர்களும் நடப்படுகின்றன. இங்குள்ள பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு பாதுகாப்புக்காகவும் வேலை தேடியும் புலம்பெயர்ந்து சென்றுள்ளார்கள் குறிப்பிடத்தக்கது.
     இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் யுத்தம் காரணமாக 1999ஆம் ஆண்டு பருத்தித்துறை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். தற்போது அரசாங்க காணியில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய மருதங்கேணியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 60 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் சொந்த காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.  தற்போது மீளக்குடியேறிய மக்கள் தற்காலியமாக குடியிருக்கின்றனர். இவர்களுக்கு மீளக்குடியேற்றப்பட்டு அரசாங்கத்தினால் மண்வெட்டி, கோடாரி, கத்தி, 12 தகரங்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
தற்போது மீள்குடியேற்றப்பட்டு ஒரு வருடமாகியும் இன்னும் சுமார் 140 குடும்பங்களுக்கு சொந்தக்காணிகள் இன்றி இருக்கின்றார்கள். சில குடும்பங்கள் கிணறு இன்றி உறவினர்களின் வீட்டில் சென்று தான் தண்ணீர் எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply